பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை முடக்கிய இலங்கை அரசு..!!


பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை முடக்கிய இலங்கை அரசு..!!


பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை இலங்கை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏறத்தாழ 2.25 கோடி மக்கள் வாழுகிற குட்டி நாடான இலங்கை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது, சுற்றுலாத்துறை முடங்கியது. இதற்கிடையே அன்னியச்செலாவணி காலியானதால் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.

இலங்கை, அதன் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரும்பாலும் இறக்குமதியை நம்பி இருந்த நிலையில், அன்னியச்செலாவணியில்லாததால், இறக்குமதி பாதித்தது. உணவுப்பொருட்கள், இன்னபிற அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அவற்றின் விலை விண்ணோடும், முகிலோடும் போட்டி போட, சாமானிய மக்களின் வாழ்க்கை தள்ளாடத்தொடங்கியது.

இதற்கு மத்தியில் தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட, அடி மேல் அடி விழ, இனியும் பொறுப்பதற்கு இல்லை என்கிற வகையில் மக்கள் பொங்கியெழுந்து தெருவில் இறங்கி போராடினார்கள். 31-ந்தேதி கொழும்பு நகரில் அதிபர் மாளிகை முன் ஆயிரக்கணக்கானோர் கூடி அதிபருக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து மக்களை விரட்டியடித்தனர். பலர் படுகாயம் அடைய 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை பயங்கரவாதிகள் என அரசு அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கும், கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கும் இலங்கை மனித உரிமைகள் கமிஷன் தலைவரும், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியுமான ரோகிணி மாரசிங்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த அசாதாரணமான சூழலில், அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை அமல்படுத்தி உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிக்கையை அவரது செயலாளர் காமினி சேனரத் வெளியிட்டார்.

இதன்படி இலங்கை முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் திங்கள் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து தலைநகர் கொழும்பு வீதிகளில் ராணுவமும், போலீஸ் படையும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கையில் போராட்டங்களைத் தடுப்பதற்காக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்குச் சட்டத்தின் போது அத்தியாவசிய சேவைகளுக்காக தவிர இலங்கையர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியாகவும், நாட்டில் போராட்டங்களைத் திட்டமிடுவதற்கு மக்களைத் திரட்டுவதைத் தடுக்கவும், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் யூ-டுயூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகத் தளங்களுக்கான அணுகலையும் இலங்கை அரசாங்கம் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Comments

Popular posts from this blog